Saturday 22 June 2013

இரண்டு கேள்விகள்!

இரண்டு கேள்விகள்!

இவ்வுலகில் உயிர் வாழ பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையல்ல. இவ்வுலகில் இறைவன் நமக்கு அளித்துள்ள செல்வமும் - செல்வாக்கும் மறுமை வாழ்வை தேடிக்கொள்வதற்காக மட்டுமே!
பணத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறை அத்யாயம் 2ல் வசனம் 267ல் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதனை செய்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள். அதிலிருந்து நீங்கள் கெட்டதை நாடாதீர்கள்'' என்கிறான்.
நாம் பேசும் பொய்களில் பணம் பற்றிய பொய்களே அதிகம். பணத்தின் மீதுள்ள மோகத்தால் உண்டாகும் தவறுகள் எத்தனை எத்தனையோ!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாகிய ஜகாத்தை (ஏழை வரி) தன்னிலும் கீழ்நிலையிலுள்ள வறியவருக்கு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, பணம் படைத்தவன் ஜகாத் கொடுக்காதிருந்தால், அது அவனது பணத்தின் மீது காட்டும் ஆசையாகும். நலிந்தோர்க்கு உதவினால் இறைவன் மீது காட்டும் நேசமாகும்.
பணம் சேர்க்கக் கருதி பொய் பேசுவது, அடுத்தவர் மீது பகைமை காட்டுவது, லஞ்சம் வாங்குவது, வட்டி வாங்குவது போன்ற தீய செயல்கள் அனைத்தும் பணத்தின் மீது மேற்கொண்டுள்ள வெறியைத்தான் காட்டுகிறது.
நபித்தோழர்களிடம் இருந்த பணம் மனித சமுதாயத்திற்கே பயன்பட்டு வந்தது. அன்னை கதீஜா (ரலி), அபூபக்கர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), உதுமான் கனி (ரலி) ஆகிய நபித் தோழர்கள் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் அனைவரும் செல்வத்தை நேசிக்கவில்லை. இறைவனின் நேசம் ஒன்றினையே பற்றுகொள்ள இறை வழியில் தனது செல்வம் அனைத்தையும் செலவிட்டனர்.
"அல்லாஹ் தன் கருணையினால் தங்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு (அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாமல்) கஞ்சத்தனம் செய்கிறவர்கள், அது அவர்களுக்கு நல்லது என்று திண்ணமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். அப்படி அல்ல, அது அவர்களுக்கு தீமைதான்; எதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்வார்களோ, அது இறுதி நாளில் அவர்கள் கழுத்தில் நெருப்பிலான மாலையாக அணிவிக்கப்படும்.
வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பற்றி நன்கறிந்தவனாக இருக்கிறான்.
தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம் ஒரு நூலிழைதான். அதனைப் புரிந்துகொண்டால் சொத்து- சுகமுள்ள வாழ்க்கையை ஈமானுள்ள (இறை நம்பிக்கை) வாழ்க்கையாக மாற்றி விடலாம்'' என்று அல்லாஹ் தனது திருமறை அத்யாயம் 3ல் வசனம் 180ல் கூறுகிறான்.
ஒருவர் மரணமடைந்துவிட்டால், ""இவர் எவ்வளவு சொத்து சுகங்களைச் சேர்த்து விட்டுச் சென்றுள்ளார்?'' என்கின்றனர். ஆனால், மண்ணறையில் வானவர்களோ, ""நீ மறுமை வாழ்விற்காக எதனைக் கொண்டு வந்துள்ளாய்?'' என்கின்றனர். இரண்டு கேள்விகளில்தான் ஒரு மனிதனுடைய சீரிய வாழ்வு அமைந்துள்ளது.
"தக்வா' எனும் இறையச்சம்தான் ஒரு மனிதனை உயர் நிலையில் சேர்க்கும். பணத்தின் மீதுள்ள நேசம் தாழ்வு நிலையை அடையும். எனவே, இறையச்சத்துடன், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.


Friday 14 June 2013

சமுதாயம் அமைதியாகும்!.......


மனித நேயமிக்கவர் அண்டை வீட்டாரோடு மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. மேலும், எவரும், சொல்லாத மிக உன்னத வழியில் மனித உறவுகளைச் சீரமைப்பதில் இஸ்லாம் தனித்து நிற்கிறது.
ஒவ்வொருவரின் வாழ்வில் திடீரென ஏற்படும் நல்லது - கெட்டது போன்ற சம்பவம் ஏற்படின் உடனே முன் நின்று ஆவண உதவி, ஒத்தாசைகளை செய்பவர் அண்டை வீட்டாரே. நமது சொந்த பந்தங்கள் தகவல் தெரிந்தபின்தான் வர இயலும். இது யதார்த்தமான உண்மையாகும்.
அண்டை வீட்டாருக்கு நன்றி செலுத்தும்படி இறைவன் அல்குர்ஆன் அத்யாயம் 4, வசனம் 36ல் கூறுவதைக் காண்போம்:
"அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள். தாய் - தந்தையர்க்கு நன்றி செலுத்துங்கள். உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி செலுத்துங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை''.
நபித் தோழர் ஒருவர், ""அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?'' என்று அண்ணலாரிடம் கேட்டார்.
"அண்டை வீட்டாரைக் காணும்போது புன்முறுவல் பூப்பது, அவரைக் காணவில்லை என்றால் அவரைப் பற்றி விசாரிப்பது, அவர் வழித் தவறி விட்டால், அவரை நேர்வழிப்படுத்துவது, அவரது நற்பண்புகளை பரவச் செய்வது, அவரது குறைகளை மறைப்பது போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
அண்டை வீட்டாருக்கு நோய் ஏற்பட்டால் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறுவது, அவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டு நன்மைகளைச் செய்து தேவைகளைப் பூர்த்தி செய்வது, மற்றும் அவர்கள் கடன் கேட்டால் கொடுத்து உதவுவது.
அண்டை வீட்டார் மரணித்துவிட்டால் அவரது உடலை அடக்கம் செய்யும் வரை சென்று நல்லடக்கத்தில் பங்கேற்பது, அவரது பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
அண்டை வீட்டார் சம்மதம் தெரிவித்தால்கூட உங்கள் வீட்டு ஜன்னல்களை அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்காதீர்கள். மேலும், காற்று வெளிச்சம் அவர்களது வீட்டிற்குள் செல்லாத அளவில் உங்களது மதில் சுவரை உயர்த்திக் கட்டாதீர்கள்.
உங்களது குழந்தைகளுக்கு பழம் வாங்கி வந்தால், அதை அண்டை வீட்டுக் குழந்தைகள் பார்க்கும் அளவில் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தால், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்காகவும் அப்பழங்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து கொடுத்தனுப்புங்கள்'' என்று நபித்தோழரிடம் அண்டை வீட்டார் பற்றிய அனைத்து தகவல்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுதுரைத்தார்கள் காருண்ய நபி.
அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணி வாழ்வதைத்தான் இஸ்லாம் மிகமிக வலியுறுத்துகிறது. இதனால், சமுதாயம் அமைதியையும், நிம்மதியையும் தழுவும். அத்துடன் ஒற்றுமையும் உறுதியும் பெருகும்.

First Published : 13 June 2013 03:22 PM IST

Saturday 1 June 2013

பணிவின் உயர்வு!


பணிவின் உயர்வு!

First Published : 30 May 2013 04:34 PM IST
அனைவரும் போற்றும் வகையில் மனிதர்களிடம் சொல் - செயல் அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட குணம் உள்ளோர் "நற்பண்பினர்' என அழைக்கப்படுவர். அனைத்து நற்பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும்படி இஸ்லாம் பணிக்கிறது.
நற்பண்புகள் என்பது நபிமார்கள் மற்றும் நல்லோரின் குணங்களாகும். ஒரு மனிதன் நற்பண்புகளை பின்பற்றி வந்தால், அவருடைய கௌரவம் உயர்த்தப்படும். நற்குணம் கொண்டோர் பிரதி பலனை, இம்மை - மறுமை வாழ்வில் இறைவனால் பெறப்படுவர்.
'ஒருவரிடம் நற்குணங்கள் இருந்தால், நிச்சயம் அவரிடம் இறையச்சம் இருந்தே தீரும். இறையச்சம் இருந்தால், அவரது செயல்கள் அனைத்தும் நற்செயல்களாக இருக்கும். எனவே, அவருக்கு இறைவனின் நல்லருள் கிடைப்பது உறுதி. மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும், நற்குணங்களும்தான்'' என்பது நபிமொழியாகும். பிறருக்கு அதிக நன்மைகள் செய்பவர்கள்தான் இறைவனுக்குப் பிரியமானவர்கள்.
"பணிவு என்பது ஓர் உயர்வான குணம். பெருமை என்பது தாழ்வான குணம். நாம் அனைத்து மக்களிடமும் பணிவாக நடந்துகொண்டால், இறைவன் நம்மை உயர்வான அந்தஸ்தில் வைத்திருப்பான். உலகில் பெருமையாக நடப்பவர்களை கீழ் மட்டத்திலேயே வைத்திருப்பான் (அல்குர்ஆன்: 17:23:24)''.
ஒரு மனிதரிடம் பணமும் - பதவியும் வந்து சேரும்போது, பணிவும் கனிவும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஏற்பட்டால், அவரது வாழ்வு, நோய்நொடியின்றி நலமுடன் அமையும். பெருமையும்-பந்தாவும் அதிகரித்தால் அவரது வாழ்வில் கேடு விளையும் என்பதில் சந்தேகமில்லை.
பணிவு என்கிற நற்பண்பானது உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதாவது பார்வை, சொல், செயல், நடை, உடைகளில் ஏற்படும் பணிவே உண்மையான பணிவாகும்.
"பணிவாக நடங்கள், பெருமையடிக்காதீர்கள். ஒருவர் மற்றவர் மீது வரம்பு மீறாதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
"தர்மம் அளிப்பதால் பொருள் குறையாது. அல்லாஹ்விற்காக பணியும் எந்த மனிதரையும் அல்லாஹ் உயர்த்தாமல் விட்டதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்).
பந்தானது பணிய பணிய அது உயரே எழும்புகிறது. பணியாமல் உயரே செல்லும் பந்து தாழ்ந்து கீழே விழுந்துவிடும். இதேபோன்றுதான் மனிதரும் பணிவாக செயல்பட செயல்படத்தான் உயர்வடைகின்றார். பணிவாக செயல்படாத மனிதர் தாழ்வு நிலையை அடைகின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் மக்காவாசிகளுக்காக ஆடு மேய்ப்பாளராக இருந்து ஆடுகளை மேய்த்து பணிவைக் கற்றுக் கொண்டார்கள். ஒரு பிரயாணத்தில் கலந்துகொண்ட பெருமானார் அவர்களும், அவர்களது தோழர்களும் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. சமையலுக்கான வேலைகள் முழு வீச்சில் நடந்தபோது, ஒவ்வொருவரும் ஒரு பணியைத் தேர்ந்தெடுத்தனர். அன்றைய ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த பொறுமையின் சிகரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சமையலுக்கான விறகுகளை சேகரிக்கும் பணியை ஏற்றுக்கொண்டு, பணிவுடன் நடந்துகொண்டார்கள். இதுபோன்ற பணிவுதான் மிக்க உயர்வான பணிவாகும்.
மேற்கூறப்பட்ட நற்குணங்கள் யாவும் பணிவின் அடையாளங்கள். எனவே, பணிவோடு நடந்து மனநிறைவோடு வாழ்வோம்.

Thanks Dinamani Vellimani -31-05-2013