Saturday 30 November 2013

பொறுமையின் சிகரம்...................


ஒரு மனிதன், உடலில் நோய்கள், துன்பங்கள், இறை சோதனைகள் எதுவுமின்றி நலமுடன் இருந்தால் மட்டுமே இறைவனை வணங்கி வழிபட இயலும் என எண்ணுகின்றான்.
இதற்கான பதிலை இறைவன் தனது திருமறையில் அத்.3 - இல், வசனம் 186-இல் இப்படி கூறுகின்றான். "(முஃமின்களே) இறை நம்பிக்கைக் கொண்டோர்களே! உங்கள் ஆத்மாக்களிலும் நிச்சயமாக  நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்''.
ஒரு மனிதனுக்கு அனைத்து சோதனைகளும் வந்த பின்தான் இறைவனுடைய நினைவே வரும். உடனே அவனை வணங்க முற்படுவான். ஆனால், அம்மனிதன் உலக இன்ப வாழ்வில்  திளைத்திருக்கும்போது இறைவனை மறந்து கர்வமும், இறுமாப்பும் கொண்டலைவான். ஆனால், ஈமானின் (இறை நம்பிக்கை) அடையாளம், எந்நிலையிலும் இறைவனை வணங்கி வழிபடுதலே  சிறப்பாகும்.
துன்ப துயரங்களைக் காட்டி கடமையான வணக்க வழிபாடுகளை செயல்படுத்தாதவனிடம், இறைவன் மறுமையில் நபி ஐயூப் (அலை) அவர்களையே எடுத்துக் காட்டாகக் கூறி, ""இவரை விடவா நீ  பிணியாளனாக, துன்பத்தில் துயரப்படுபவனாக, சோதனைக்கு உட்பட்டவனாக இருந்தாய்?'' எனக் கேட்பான் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.
ஐயூப் நபி இறைவனின் நல்லடியாராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் இப்லீஸ் (சாத்தான்) இறைவனிடம் ""நான் உனது நல்லடியார்களை எனது வழி கேட்டில் ஆக்கி விட்டேன்''  எனப் பெருமை கொண்டான்.
உடனே, ஐயூப் நபியைக் காட்டி, "இவரை உனது வழிக்கேட்டில் ஆழ்த்த முடிந்தால் செய்'' என்றான் இறைவன்.
முதலில் ஐயூப் நபியின் செல்வம் அனைத்தையும் அழித்தான். அடுத்து அவரது மக்களை மரணிக்கச் செய்தான். இவ்வளவு கொடுமைகள் நடந்தும் நபியவர்கள் அணுவளவும் "பொறுமையை  இழக்கவில்லை. இறுதியாக, நபியின் உடல் முழுவதும் கொடிய புண் ஏற்படச் செய்தான். அவற்றில் எண்ணற்ற புழுக்கள் நெளிந்தன. ஆனால், நபியின் உடலில் ஏற்பட்ட அரிப்போ, இவர்களைக் கொன்றுக்  கொண்டிருந்தது.
இக்கொடுமையினைக் கண்ட நபியின் மனைவி ரஹ்மா அவர்கள், ""இத்துன்பத்திலிருந்து மீள இறைவனிடம் இறைஞ்சக் கூடாதா?'' என்றனர்.
"நலமாகவும் - வளமாகவும் எண்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இறை சோதனையிலிருந்து மீள அல்லாஹ்விடம் இறைஞ்ச நாணமுறுகிறேன்'' என்றனர் ஐயூப் நபி.
மேலும், "இறைவனை பரிபூரணமாக வணங்கவும், அவனை எண்ணி துதிக்கவும் இயலவில்லையே...?'' என வருந்தி கண்ணீர் விட்டு அழுதார்கள் ஐயூப் நபி.
இறுதியாக, ஐயூப் நபியின் பொறுமையையும், துன்பத்தில்கூட தன்னை நினைத்து வருந்தியும், தன்னால் முடிந்த வரை வணங்கி வழிபட்டதையும் ஏற்றுக்கொண்டு, இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரயீல்  (அலை) அவர்களை அனுப்பி, நபி ஐயூப் (அலை)அவர்களுக்கு ஏற்பட்டிருந்த நோயை குணப்படுத்தும்படி ஏவினான் என்பது வரலாறு.
பிறக்கும்போதே சோதனையின் முழு உருவினைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்க மறுத்தவர்களால் ஏற்பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. இருப்பினும்  பொறுமையின் சிகரமாக வாழ்ந்து வாகை சூடினார்கள் கண்மணி ரசூல் (ஸல்) அவர்கள்.
எனவே, நாமும் நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து சோதனைகளையும் பொறுமையோடு ஏற்று இறைவனைத் தொழுது, இறுதி நபி(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் (பரிந்துரை) பெறுவோமாக.


ஜி. அஹ்மது


First Published : 28 November 2013 03:49 PM IST
Thanks to dinamani vellimani 

Friday 22 November 2013

சுமைகளைப் பகிர்பவன்.................


நபிகளார் ஒரு நாள் இரவு மக்காவின் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். மக்கள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் ஒரு மூதாட்டி மூட்டைகளுடன் தூக்க இயலாச் சுமைகளோடு நின்று கொண்டிருந்தார்
அந்த மூதாட்டியிடம் நபி(ஸல்) அவர்கள், “தாங்கள் எங்கே செல்ல வேண்டும்?’’ எனக் கேட்டுச் சுமைகளை தன் தலை மீது வைத்துக்கொண்டார். இருவரும் நடந்து செல்லும்போது, “இந்த இரவு நேரத்தில் தூக்க இயலாத சுமைகளோடு எங்கே செல்கிறீர்கள்?’’ என அண்ணலார் கேட்டார்கள்.
“இந்த ஊரில் யாரோ முஹம்மது என்பவர், புதிய கொள்கை ஒன்றினைக் கூறி மக்கள் மனதை மாற்றி வருகிறாராம்.
எங்களது மூதாதையர் வணங்கி வந்த தெய்வங்களை எல்லாம் வணங்கக் டாது என்கிறாராம். அல்லாஹ் ஒருவரை மட்டுமே வணங்கி வழிபட வேண்டுமென்று சொல்கிறாராம். நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. எனவே நான் அந்த முஹம்மதை சந்தித்தால், மனம் மாறி எங்களது மூதாதையரின் கொள்கைகளை விட்டு விடுவேனோ என்கிற அச்சத்தால் தான், இந்த ஊரை விட்டே செல்ல இருக்கிறேன்’’ என்று படபடவெனப் பொிந்து தள்ளினார் அந்த மூதாட்டி.
நபிகளார் தலைச் சுமையொடு ஊருக்கு வெளியே மூதாட்டியுடன் நடந்து செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அந்த மூதாட்டி, “போதும், இனி நான் தனியாகப் பிரயாணம் செய்து கொள்வேன். நீங்கள் என்னுடன் வர வேண்டாம்” எனக் றிவிட்டு,
“ஆமாம், இந்த இரவு நேரத்தில் நான் தங்களிடம் உதவி கேட்காமலேயே எனக்கு உதவி செய்தீர்களே, தாங்கள் யார்? ” என்று கேட்டார் மூதாட்டி.
“ நீங்கள் இவ்வளவு நேரம் எந்த முஹம்மதைப் பற்றிக் கூறி, அவரை சந்திக்கவே கூடாது என்று இந்த ஊரை விட்டே வெளி யேறுகிறீர்களோ, அந்த முஹம்மது (அல்லாஹ்வின் தூதர்) நான்தான்’’ என நபிகள் நாயகம் பணிவாகக் கூறி முடித்தார்கள்.
அந்த மூதாட்டி, நபியின் அன்பைக் கண்டு பெரிதும் ஆச்சரியமடைந்தார்.


நாகை ஜி.அஹ்மது
Thanks  to Tamil.thehindu.com
posted 21-11-2013

இளமையும் முதுமையும்....


இவ்வுலகில் நாம் வாழ தாயின் கருவறையில் நம்மைப் படைத்த இறைவன், இங்கிருந்து மண்ணறை செல்லவும் செய்கின்றான்.
"எதையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், அல்லாஹ் உங்களை - உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளிலிருந்து வெளியாக்கினான். இன்னும் உங்களுக்கு செவிப் புலனையும், பார்வையையும், இதயத்தையும் அமைத்தான், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக''(அல்குர் ஆன்: 16:78).
"நாம் பிறக்கும்போது நமக்குப் பல் இல்லை. சுயமாக எங்கும் செல்ல இயலாது. உடல் வலி,வேதனை,நோய் போன்றவை ஏற்பட்டால் அழத்தான் முடியும். எந்த உணவு ஜீரணிக்குமோ அந்த உணவே கொடுக்கப்பட்டது. பிறரால் ஊட்டப்பட்டோம்.
அல்லாஹ் - அவன் எத்தகையவன் என்றால் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை அவன் படைத்தான். பலவீனத்திற்குப்பின் (உங்களுக்கு) சக்தியை உண்டாக்கினான். மீண்டும் பலவீனத்தையும் (முதுமையின்)நரையையும் உண்டாக்கினான். தான் விரும்பியதைப் படைக்கிறான், அவன் முற்றிலும் அறிந்தவன் - சக்தியுள்ளவன் (அல்குர் ஆன்:30:54)''.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள அனைத்தும் நமக்கு நிச்சயம் நடைபெற உள்ளது. அதன் பெயர்தான் முதுமை. நாற்பது வயதை எட்டிய பின் முதுமை ஆரம்பமாகிறது. முதலில் நாம் இழப்பது பற்களைத்தான். அடுத்து பார்வையின் சக்தி குறைய ஆரம்பித்துவிடும். கேட்கும் செவித்திறனும் குறைந்து செவிட்டுத்தனம் ஆரம்பமாகும். முழங்காலில் வலி ஏற்பட்டு உட்கார்ந்தால் எழ முடியாது. எழுந்தால் உட்கார முடியாது. பிறகு ஞாபக சக்தி குறைந்து மறதி உண்டாகும். தலைமுடி வெண்மையாக மாறும்.
டை (கறுப்புச் சாயம்) அடிப்பவன் மரணத்தை தொட்டுவிட்ட ஏமாளி. இளமையோ, வயதையோ மீட்க முடியாது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.
"எவரோ மரணம் அடைந்துவிட்டால் அழுகிற ஒருவர், தனது மரணத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளட்டும்'' என இரண்டாம் உமர்(ரலி) கூறியுள்ளார்.
இளமையில் நற்செயலின்றி கழித்தவர்கள் முதுமையிலும் அவ்வாறிருப்பது நல்லதல்ல. உலக ஆசாபாசங்களை குறைத்துக்கொண்டு மண்ணறைக்குத் தேவையான தயாரிப்புகளை செய்து கொள்வதே அறிவுடமையாகும். எனவே, இளமையிலும் முதுமையிலும் அல்லாஹ் இரசூல் கூற்றின்படி நடந்து சுவன பதியை அடைவோமாக.



Thanks to Dinamani
First Published : 21 November 2013 04:14 PM IST

Saturday 9 November 2013

வாழ்க்கையின் தொடக்கம் அழுகை


நாகை.ஜி.அஹ்மது

உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான். அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது.
குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்; அறியாமலே அழுதோம்.
முதல் அழுகை மூச்சு விடுவதற்கு, நுரையீரல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள; அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க. குழந்தைகள் இவ்வுலகில் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கின்றன. குழந்தை பிறந்து ஓராண்டு வரையில் அழுதுகொண்டேதான் இருக்கும். அதன் அழுகையை நிறுத்த வேண்டாம்.
ஏனென்றால், குழந்தை பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை அழுகின்ற அழுகையானது 'கலிமா'(இஸ்லாத்தின் மூலமந்திரம்) ஆக இருக்கும். அடுத்த நான்கு மாத அழுகை நபிகள் நாயகம்(ஷல்) அவர்கள் கூறும் 'ஸ்லவாத்'( நபி புகழ்) ஆக இருக்கும். அடுத்த நான்கு மாத அழுகை தனது பெற்றோருக்காக கேட்கும் 'துஆ'(இறைஞ்சுதல்) ஆக இருக்கும்.
வளரும் போதும், வளர்ந்த பிறகும் அழுவதை அறிந்து அழுகின்றோமா? எப்போது அழலாம்-எப்படி அழலாம்-எங்கே அழலாம்? என்பதையெல்லாம் எப்படித் தீர்மானிக்கின்றோம்? நாமே தீர்மானிக்கின்றோமா? அல்லது மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்களா?
யோசித்துப் பாருங்கள்!
பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. ஆண்கள் அழவே கூடாது! ஏன் இப்படி? அழுகை என்பது பலவீனம் என்கிற கருத்துதான் அடிப்படை. பெண்களின் அழுகை அவர்களின் பலவீனமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீர்என்று திருவள்ளுவர் சொல்வது துன்பத்தின் வெளிப்பாடுதான். கவிக்கோ அப்துல் ரஹ்மான்,'தட்டாதே திறந்திருக்கிறது' என்ற நூலில் கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காதுஎன இரண்டே வரிகளில் அழுங்கள் அது நல்லது என்று சுவைப்பட கூறியுள்ளார்.
அழுகை என்பது ஒரு வெளிப்பாடு; மகிழ்ச்சியைப் போல. வருத்தம் என்பது ஓர் உணர்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல வழிகள் இருப்பது போல வருத்தத்தை வெளிக்காட்ட பல வெளிப்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அழுகை.
எனவே உங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டால் அழுது உங்கள் சுமையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

Thanks Tamil.TheHindu News Paper Published @ 09-11-2013