Friday 17 January 2014

நற்செயல்கள் புரிவோம்...


எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே; அவனைத் தவிர வணங்க தகுதி படைத்தவன் வேறு யாருமில்லை' என மனத்தால்- நாவால்- செயலால் உறுதிப்படுத்துவதே (ஈமான்) "இறை நம்பிக்கை'யாகும். ஈமான் கொண்டவர்கள் (முஃமிஃமின்கள்) இறை நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவர்.
"ஈமானும் - இஸ்லாமும்' ஒன்று என்னும் பொருள்பட திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ளது. இறைவன் ஒருவன் என உள்ளத்தால் நிர்ணயம் செய்வதற்கு "ஈமான்' என்றும், செயல் முறையால் காட்டுவதற்கு  "இஸ்லாம்' என்றும் கூறப்படுகிறது.
உலகப் பேராசையே இறை நம்பிக்கைக்கு எதிராக இன்று நம்முன் நிற்கிறது. சிற்றின்பங்களுக்காக செய்யப்படும் பாவங்களினால், ஈமான் கரையப்பட்டு மறுமையின் பேரின்பத்தை இழக்கச் செய்கிறது.
நபித் தோழர்கள் தங்களது உயிர் பிரியும் நேரத்தில் கூட, தங்களது (ஈமான்) இறை நம்பிக்கை, (இபாதத்து) வணக்க வழிபாடு பற்றித்தான் கவலை கொண்டனர். மாறாக, தாங்கள் இறை மறுப்பாளர்களால்  கொல்லப்படுவது குறித்தோ, அதனால் ஏற்படும் வேதனை குறித்தோ கவலைப்பட்டதே இல்லை.
1. நாம் உண்ணும் உணவு நேர்மையான வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். 2. பிறர் பற்றி புறம் பேசுவதும், கேட்பதும் குற்றம் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறர் பற்றி புறம்  பேசாது இருக்க வேண்டும். 3. ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது. எனவே, மற்றவரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம். 4. உலக இன்பத்தினை மனதால்  விரும்பினால் ஷைத்தான் கேலி செய்வான். எனவே, உலக இன்பங்களை மனத்தால் கூட விரும்ப வேண்டாம்.
மேற்கண்ட நான்கு வித நற்செயல்களை கடைப்பிடித்து, மனத்தூய்மையுடன் செயலாற்றினால், இறைவன் நமக்கு நற்பேற்றினை அருள்வான்.
ஒரு நன்மையான செயலை நல்ல நோக்கத்துடன் செய்தால், அது எவ்வளவு சிறியதாய் இருப்பினும், அதை மலையளவு பெரிய செயலாக இறைவன் ஏற்பான். நல்ல எண்ணமும், நல்ல நோக்கமும்  இல்லாத செயல் எவ்வளவு பெரியதாய் இருப்பினும்,அதை இறைவன் ஏற்க மாட்டான்.
இறைநேசர் நிஜாமுதீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் இப்படிக் கேட்டார். ""உலக நோக்கங்கள் அற்ற தூய்மையான எண்ணத்துடனும், உலக நோக்கங்களோடும் நிறைவேற்றப்பட்ட செயல்களினால்  மறுமையில் ஏற்படும் முடிவு ஏதுவாக இருக்கும்?''
கோதுமை மாவும், தண்ணீரும் கொண்டுவரச் செய்து, இரண்டையும் ஒரே பாத்திரத்தில் போட்டு பிசையும்படி கூறினார். அதன்பின், தண்ணீரையும், மாவையும் தனித்தனியாகப் பிரித்து எடுக்கும்படி  கூறினார் இறைநேசர்.
உடனே, அம்மனிதர், ""நீங்கள் கூறுவது எப்படி முடியும்? பிசைந்த மாவிலிருந்து தண்ணீரைத் தனியாகப் பிரிக்க முடியாதே'' என்றார்.
"இதே போல்தான், எந்த எண்ணத்துடன் ஒரு செயல் உலகில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்த எண்ணம் அச்செயலுடன் கலந்து விடுகிறது. மறுமையில் அதற்கான கூலி நிச்சயம் உண்டு. மாவிலிருந்து  தண்ணீரைப் பிரிக்க முடியாதது போல், நற்செயலில் கலந்துவிட்ட, தீய எண்ணத்தை மறுமையில் பிரிக்க முடியாது'' என்று விளக்கிக் கூறினார் இறை நேசர் நிஜாமுதீன் (ரஹ்)
"உங்களுடைய இறை நம்பிக்கையை தூய்மையாக வைத்துக்கொள்ளும். ஒரு தூய்மையான செயல் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றும்"" நபிகள் நாயகம் (ஸல்).
பாவம் செய்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது - தொழுது இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான். அந்த மன்னிப்பால், பாவம் செய்த அம்மனிதன் நரகம்  செல்வதும் முடியாத செயலாகிவிடும்.
எனவே, இறை கட்டளைப்படியும், நபிகளாரின் சொல், செயல்படியும் நற்செயல்களைப் புரிந்து சுவனம் புகுவோம்.


First Published : 16 January 2014 02:26 PM IST

Saturday 11 January 2014

இறைவனின் அருட்கொடை...

இறைவனின் அருட்கொடை

First Published : 09 January 2014 03:06 PM IST
இறைவன் முதன் முதலில் இவ்வுலகைப் படைத்தான். அதன்பின் மனிதனையும், அனைத்து உயிரினங்களையும் படைத்தான். அவர்கள் உயிர் வாழ மரம், செடி, கொடி, ஆறு, குளம், குட்டை, கடல், மலை,  சூரியன், சந்திரன் என அனைத்தையும் உண்டாக்கினான்.
மண்ணுக்கும் மனிதர்களுக்கும் ஊற்றுக்கண் தண்ணீர்தான் என்பதை உலகே அறியும். "நீரின்றி அமையாது உலகு' என திருவள்ளுவர் கூறியுள்ளார். மேலும், நாம் உண்ணும் சோறு (நெல்) தரும்  விவசாயத்திற்கு உயிர் நாடி தண்ணீர்தான்.
இறைவன் தனது திருமறை அத்.7, வசனம் 57இல் மழையை பூமியில் எப்படி பொழியச் செய்தான் என்பதைக் காண்போம்.
"தனது அருள் மழைக்கு முன் நற்செய்தி சொல்லக்கூடியதாக (குளிர்ந்த) காற்றை அனுப்பி வைக்கிறான். அது கனமான மேகத்தை சுமக்கும்பொழுது மழையை (வறண்ட) ஊரின் பக்கம் பொழியச்  செய்கிறோம். அதன்மூலம் எல்லா (வகை) கனி வர்க்கங்களையும் நாம் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே மரணித்தவர்களை (மண்ணறையிலிருந்து) நாம் எழுப்புவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறவே  (இதனைக்) கூறுகிறோம்''.
ஆனால், கோடை காலத்தில் காற்றும், வெப்பமுமாக இருப்பதால் மேகங்கள் தோன்றினாலும் மழை பொழிய வாய்ப்பில்லை. ஆகையால், கோடை காலத்தில் ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர்  வற்றிவிடக் கூடிய நிலை ஏற்படலாம்.
மழை நீர் தெளிவாகவும், மென்மையாகவும் இருக்கும். புல் பூண்டுகள், மரம், செடி, கொடிகளின் பசுமைக்கும் வளர்ச்சிக்கும் மழைநீரின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது. சூடான இரும்பில் மழைத்துளி  விழுந்தால், இரும்பு நீரை உறிஞ்சிவிடும். அதே நீர்த்துளி தாமரை இலைமேல் விழுந்தால், முத்துபோல் மின்னும், உருளும், சூரிய ஒளியில் காய்ந்துவிடும். அதே மழைத்துளி கடலிலுள்ள முத்துச்  சிப்பியில் விழுந்தால், சிப்பி அந்த நீர்த்துளியை முத்தாக வளர்த்து நமக்குத் தருகிறது. இது இறைவன் அருளிய அருட்கொடை.
பூமியில் மணல் இருந்தால்தான் மழைநீர் சொட்டுசொட்டாக நிலத்தில் இறங்கும். இதனால் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். மணல் இல்லை என்றால் மழை நீர் கழிவு நீராக கடலில்தான் சென்றடையும்.
எனவே, மழை நீர் கடலுக்குச் சென்றடையாமல் காப்பதற்கும், பெருமழையினால் ஏற்படும் வெள்ள ஆபத்தினைத் தடுப்பதற்கும், மழை பொழியாது வறட்சி ஏற்பட்டு, பூமி விளையாது பஞ்சம் - பட்டினி  சாவுகளை ஒழிப்பதற்குச் சிறந்த வழி, அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைப்பதேயாகும். அதாவது, "தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தினால்'தான் மழை நீரை சேமித்து அனைத்து உயிர்களையும்  காத்திட முடியும்.
எனவே, மணல் கொள்ளையைத் தடுத்து மரம் வளர்த்து இறைவனின் அருள் மழையைப்பெறுவோம்.